ஜெனீவா மாநாட்டில் அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயார்: இலங்கை அறிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய மாநாடு ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் நேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை மற்றும் இங்கிலாந்து, கனடா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ஆகியோர் இலங்கை தொடர்பான தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர்.
தனது சமீபத்திய அறிக்கையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் நவிபிள்ளை. ஆனால் அதனை இலங்கை நிராகரித்தது.
அதன் தொடர்ச்சியாக ஜெனீவா மாநாட்டில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இலங்கைப் போர் முடிந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளில் தொய்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளில் தாமதம் ஆகியவை காரணமாக 3-வதாக ஒரு தீர்மானம் ஐ.நா. மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு எதிராக பிற நாடுகளின் ஆதரவைப் பெற இலங்கை முயற்சி செய்தது. இதற்காக தனது பிரதிநிதிகளை ஓவ்வொரு நாடாக அனுப்பியது இலங்கை. ஆனால், அதன் முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், ‘அமெரிக்காவின் தீர்மானத்தை சந்திக்க தயாராக உள்ளதாக' தற்போது இலங்கை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செய்தி தொடர்பாளர் மோகன் சமரநாயகே கூறுகையில், ‘ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தீர்மானத்தை சந்திக்க இலங்கை அரசு தயாராக உள்ளது. நாங்கள் இதில் வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதற்கு முன்னர் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த 2 தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. ‘அண்டை நாடான இந்தியாவில் தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால், தமிழ்நாட்டின் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தியா தீர்மானத்தை ஆதரிக்க கூடும்' எனக் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இந்நிலையில் இன்று மியான்மரில் நடைபெறும் வங்க கடல் நாடுகள் (பிம்ஸ்டெக்) உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க உள்ளார் ராஜபக்சே. அந்த சந்திப்பின் போது அமெரிக்கத் தீர்மானம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
7 உறுப்பு நாடுகளை கொண்ட பிம்ஸ்டெக்கில் இந்தியா மட்டுமே ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications