தனித் தமிழீழ கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டது: இலங்கை நாடாளுமன்றத்தில் இரா. சம்பந்தன் பேச்சு
கொழும்பு: தனித் தமிழீழ கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. தலைவர் சம்பந்தன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தை அரசியல் அமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான விவாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தின் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பேசியதாவது:
இலங்கையில் புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்கியவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதனால் இலங்கை சுதந்திரம் அடைந்தும் கடந்த கடும் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போர் நாட்டை பல ஆண்டுகளுக்குப் பின் தள்ளிவிட்டது. தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் சந்தித்தார்கள்.

தனிநாடு கேட்கவில்லை
இன்று எவரும் தனி நாடு கேட்கவில்லை. தனித் தமிழீழ கோரிக்கையும் இன்று இல்லை. போர் முடிவடைந்ததோடு தனி நாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை ஏற்றுவிட்டோம்
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள், மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற, தேர்தல்களின் போது எமக்கு வாக்களித்து ஜனநாயக அரசியலமைப்பை தமிழ்மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

ஒன்றுபட்ட இலங்கைக்குள்....
பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வை காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்புக் கூறும் அரசு அமைய வேண்டும். இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

ராஜபக்சே தேவை...
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் ஒரு தேசியத் தலைவர் தான். அவரும் புதிய அரசியலமைப்புக்காக தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களின் அங்கீகாரத்துடன் இந்தப் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஒரே இலங்கை உருவாக்கப்பட வேண்டும். நான் ஒரு இலங்கையன் என்றும் இது எனது நாடு என்றும் பெருமையாக கூறும் நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு இரா. சம்பந்தன் பேசினார்.












Click it and Unblock the Notifications