இலங்கையில் அமைச்சரின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு.. 2 பேர் காயம்.. பரபரப்பு!
இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதே சமயம் ரணில், தான்தான் பிரதமர் என்று கூறி வருகிறார். இதனால் பெரிய குழப்பம் நிலவி வருகிறது.
இலங்கையில் அரசியல் குழப்பம் நீடிக்கும் சமயத்தில் தற்போது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அந்நாட்டு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
அர்ஜுனா ரணதுங்கா பெட்ரோலிய துறை அமைச்சராக உள்ளார். இந்த நிலையில் கொழும்பின் டிமாடகோடாவில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆவணங்களை எடுக்க அர்ஜுனா ரணதுங்கா அவரது பாதுகாலவர்களுடன் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அங்கிருந்து பணியாளர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்களை ஆவணங்களை எடுக்க விடாமல் அங்கிருந்தோர் தடுத்து இருக்கிறார்கள். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்று மோதலானது. இதையடுத்து அமைச்சரின் பாதுகாவலர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ரணதுங்காவின் மெய்க்காப்பாளர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். முன்னாள் கிரிக்கெட் கேப்டனான அர்ஜுனா ரணதுங்கா நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூடு நடந்தத்திற்கு அருகில்தான் அமைச்சர்கள் சிலரது வீடுகளும் உள்ளன என்பதால் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.