இசை நிகழ்ச்சியில் பாடகர் மீது பிராவை வீசிய பெண்கள்... கொழும்புவில் பரபரப்பு
கொழும்பு: கொழும்புவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாடிய பாடகர் மீது இளம்பெண்கள் உள்ளாடைகளை கழற்றி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன. இலங்கை அதிபரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பாப் இசையுலகில் புகழ் பெற்று விளங்கும் லத்தீன் மொழி பாப் பாடகர் என்ரிக் இக்லேசியாஸ். இவர் ‘லவ் அன்ட் செக்ஸ்' என்ற தலைப்பில் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அதன்படி, இலங்கை சென்ற என்ரிக் தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் கடந்த 20-ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தினார்.
லைவ் ஈவெண்ட்ஸ்...
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கரா மற்றும் மகிளா ஜெயவர்தனே ஆகியோர் இணைந்து நடத்தும் 'லைவ் ஈவென்ட்ஸ்' என்ற நிறுவனம், இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
டிக்கெட்டுகள் காலி...
இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை விற்பனை செய்யப்பட்டன. சில நாட்களிலேயே அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தது.
வரவேற்பு...
இதனால் அரங்கம் நிறைந்த காட்சியாக என்ரிக்கின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. என்ரிக் மேடை ஏறியதுமே ரசிகர்கள் அவரை உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கூச்சல்...
அதனைத் தொடர்ந்து அவர் பாடத் தொடங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் கூச்சலிட்டபடி ஆடத் தொடங்கினர். அவர்களில் சிலர் தங்களது பிராக்களைக் கழற்றி மேடை மீது பாடிக் கொண்டிருந்த என்ரிக் மீது வீசினர்.
அதிர்ச்சி...
இது மட்டுமின்றி சில பெண்கள் மேடை மீது ஏறி அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டனர். இதனால் இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்டனம்...
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. இதைப் பார்த்த புத்த பிட்சுக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை அதிபர்...
இந்த சம்பவம் குறித்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறுகையில், ‘இதைப்போல் நமது நாட்டின் கலாசாரத்துக்கு எதிரான அநாகரிகமான செயல்களை அனுமதிக்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார்.
திருக்கை மீன் வால்...
மேலும், ‘பொது இடத்தில் தங்களது உள்ளாடைகளை கழற்றிய பெண்களை திருக்கை மீன் வாலால் அடிக்க வேண்டும் என நான் வாதாட மாட்டேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை திருக்கை வால் சாட்டையால் அடிக்க வேண்டும்' என்றும் அவர் கொந்தளித்துள்ளார்.
சிக்கல்...
இந்த சம்பவத்தால் சங்கக்கரா, ஜெயவர்த்தனே ஆகியோருக்கு பெரும் தர்மசங்கடமும், சிக்கலும் ஏற்பட்டுள்ளது.