அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?
கொழும்பு: இலங்கையில் இறுதிக் கட்ட போர் நடைபெற்ற போது பாதுகாப்பு அமைச்சக உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதி கட்ட போரின் போது இலங்கை உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கையை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் குறித்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைகேட்டின் வாயிலாக வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளதாகவும், ஆனால் இவர்களின் பெயர் இலங்கை உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இலங்கையில் உள்ள முன்னாள் விடுதலை புலிகள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசின் செயல்பாடுகள் நேர்மையுடனும், வெளிப்படையாகவும் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்