சீனா ஏஜெண்ட் டக்ளஸ் தேவானந்தா சதி- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது!
யாழ்ப்பாணம்: இந்திய எல்லைக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்தும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடுகிற பணியையும் இலங்கை அரசு தொடங்கி உள்ளது.
இலங்கையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தியா ஆதரவு, சீனா ஆதரவு என இரண்டாக பிரிந்து நிற்கின்றனர். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை காலந்தோறும் இந்தியாவை ஒரு தந்தை நாடாகவே கருதி வருகின்றனர்.
வருகிறது 5 கோடி 'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசி! - அனுமதி அளித்த இந்திய மருந்துகள் கட்டுப்பாடு இயக்குனரகம்!
ஈழத் தமிழர் அரசியல் அதிகாரப் பகிர்வில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது அந்த தலைவர்களின் எதிர்பார்ப்பு. இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களின் குளறுபடிகளால் இந்திய தலையீடுகள் பிழையாகிப் போன வரலாறுகள்தான் அதிகம்.
சீனா தலையீடு
2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவின் தலையீட்டில் சற்று தொய்வு இருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் சீனா அதிவேகமாக கால் பதித்தது. இலங்கைக்கு அதிக கடன்வழங்கி அதை குறுகிய காலத்தில் செலுத்த நிர்பந்தித்தது. அப்படி இலங்கையால் கடன் செலுத்தப்படாத நிலையில் அந்நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக நீண்டகால குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறது சீனா.
டக்ளஸின் இந்திய எதிர்ப்பு
இதுவரை தென்னிலங்கையில் அதாவது சிங்களர் பிராந்தியத்தில் இப்படி அகலக் கால் வைத்த சீனாவை ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்குக்கும் அழைத்து சிவப்பு கம்பளம் விரித்து கொடுத்தார் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. யாழ்ப்பாணம், மன்னார், கச்சத்தீவு வரை சீனாவின் தூதரை அழைத்து வந்து பார்வையிட செய்தார் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு சீனா உதவிகளையும் வழங்கியது. அதாவது சீனாவின் அடியாளாக டக்ளஸ் தேவானந்தா உருமாறி இந்தியாவுக்கு எதிராக நிற்கிறார்.
தூண்டிவிடும் டக்ளஸ்
அதனால் தமிழக மீனவர்கள்- ஈழத் தமிழர் மீனவர்கள் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்குவதிலும் முனைப்பாக இருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இருநாட்டு மீனவர் பிரச்சனை குறித்து அமெரிக்கா, சீனா தூதர்களிடம் புகார் தெரிவித்திருந்தார் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் மீன்வளத்துறை அமைச்சராக டக்ளஸ் இருப்பதால் ஈழத் தமிழ் மீனவர்கள் அவரை சார்ந்தே நிற்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது. ஆகையால் தமிழக மீனவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் டக்ளஸ் தூண்டிவிடுகிறார்.
தமிழக படகுகள் ஏலம்
இதன் ஒருகட்டமாக இதுவரை இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம்விடப் போவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. அதாவது டக்ளஸ் தேவானந்தாவின் இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மீனவர்கள், தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆனாலும் இந்த எதிர்ப்பை மீறி இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கி இருக்கிறது. அதாவது தமிழக மீனவர்களுக்கு எதிரான டக்ளஸ் தேவானந்தாவின் சதி அரங்கேறி இருக்கிறது என்பதே பட்டவர்த்தமான உண்மை.