நிதி முறைகேடு வழக்கு: மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோசித்த ராஜபக்சே கைது
கொழும்பு: தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோசித்த ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டார்.
மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோசித்த ராஜபக்சே இலங்கை கடற்படை அதிகாரியாகவும் உள்ளார். ஆனால் கடற்படைக்குரிய விதிகள் எதனையும் பின்பற்றாமல் பல முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நிதிமுறைகேடு விசாரணை
மேலும் மகிந்த ராஜபக்சே குடும்பத்துக்கு சொந்தமான சிஎஸ்என் தொலைக்காட்சியையும் நிர்வகித்து வந்தார். இந்த தொலைக்காட்சியின் நிர்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பாக கடந்த பல மாதங்களாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
ரொஹான் கைது
கொழும்பில் உள்ள சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனம் பலமுறை சோதனையிடப்பட்டு ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று காலை மகிந்த ராஜபக்சேவின் ஊடகங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்த சிஎஸ்என் தொலைக்காட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான ரொஹான் வெலிட்ட கைது செய்யப்பட்டார்.
யோசித்த ராஜபக்சே கைது
இதனைத் தொடர்ந்து யோசித்த ராஜபக்சேவையும் நிதிகுற்றங்கள் தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் தலைமையகத்தில் யோசித்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர் கதை...
கைது செய்யப்பட்ட யோசித்த ராஜபக்சே, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிப்ரவரி 12-வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மகிந்த ராஜபக்சே, தேர்தலில் வீழ்த்தப்பட்டு மைத்ரிபால சிறிசேன அரசு அமைந்த பின்னர் ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு வழக்குகள் தொடரபட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படங்கள்: யோசித்தவின் ஃபேஸ்புக் பக்கம்