ஒரே புத்த விகாரையில் சாமி கும்பிட்ட சிறிசேன, ராஜபக்சே... தேர்தல் வெற்றிக்காக பிரார்த்தனை
கொழும்பு: தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக இலங்கையின் புகழ்பெற்ற அளுத்கம கந்தே விஹாரில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா மற்றும் முன்னாள் அதிபரான ராஜபக்சே தனித்தனியாக வழிபாடு நடத்தியுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்திற்கு இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இலங்கையில் புகழ்பெற்ற அளுத்கம கந்தே விஹாருக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். இருவரும் தனித்தனியாக அங்கு சென்றுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை அளுத்கம கந்தே விஹாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல், திடீரென குடும்பத்தினருடன் சென்று மாலை 6.35 முதல் 7.05 வரையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பிட்ட சில பாதுகாப்பு அதிகாரிகளுடன் சென்று அவர் வழிபாட்டார். சிறிசேனவின் வருகை விஹாரையில் அமைக்கப்பட்டுள்ள பொலீஸ் சோதனைச் சாவடிக்குக் கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஹெலிகாப்டர் மூலமாக கந்தே விஹாரைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளார். வேட்பாளர்கள் குமார வெல்கம, ரோஹித அபேகுணவர்தன மற்றும் பியல் நிசாந்த ஆகியோரும் ராஜபக்சேவுடன் சென்றுள்ளனர்.