முள்ளிவாய்க்கால் சாட்சி..இறந்த தாயிடம் பால் குடித்த சிறுமி ஈகைச் சுடரேற்றினார்! #May18TamilGenocide
முல்லைத்தீவு: இலங்கை ராணுவத்தால் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு கண்ணீருடன் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர்.
2009-ம் ஆண்டு மே 18-ந் தேதியன்று இலங்கை ராணுவத்துடனான தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் பகுதியில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டு தினம் இன்று தமிழர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது ஈகைச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் அனைத்து மத பிரதிநிதிகள் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருகோணமலை ஆதீனத்தித் தலைவர் மே 18 பிரகடனத்தை வாசித்தார்.
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது 8 மாத பெண் குழந்தை ஒன்று தாய் இறந்தது தெரியாமல் பால்குடித்த புகைப்படம் உலகையே உலுக்கியது. அந்த 8 மாத குழந்தையான ராகினிதான். இனப்படுகொலை துயரின் சாட்சியான அந்த சிறுமிதான் இன்று முள்ளிவாய்க்காலில் முதலாவது ஈகைச் சுடரை ஏற்றினார். இறுதி யுத்தத்தின் போது தனது கையை இழந்தவர் ராகினி.
பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு முள்ளிவாய்க்காலில் ஈகைச்சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications