தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை- விசாரணை கோருகிறது ஐ.நா.
கொழும்பு: இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் பாதுகாப்பு சபைக்கு அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடந்த 5 ஆண்டு காலத்தில் மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய விசாரணைகளை முன்னெடுக்க தவறியுள்ளது.

போருக்கு பின்னரான ஐந்து ஆண்டுக் காலப்பகுதியில் கடத்தல்கள், தடுத்து வைத்தல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் என்பன அதிகரித்திருந்தன. ராணுவமயத் திட்டத்தின்கீழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிப் போர்க் காலப்பகுதியில் தமிழ் சமூகத்தின் பெண்கள் மீது இலங்கைப் படையினர் பாலியல் வன்முறைகளை மேற்கொண்டனர். 2014ஆம் ஆண்டு தடுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களின் சாட்சியங்கள் இதனை நிரூபிக்கின்றன.
இனவாத அடிப்படையில் இடம்பெற்ற இந்த வன்முறைகள், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டன.
இந்தநிலையில் இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் குறித்த படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாற்று நடவடிக்கைகளையும் பொருளாதார முன்னேற்றங்களையும், குறிப்பாக போரின் போது கணவர்களை இழந்த பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களுக்கும் உதவிகளை வழங்கவேண்டும்.
இவ்வாறு பான் கீ மூன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications