இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவுக்கு சீட்- ஆளும் கூட்டணி ஒப்புதல்!
கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் சீட் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய ராஜபக்சே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 17-ந் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட ராஜபக்சேவுக்கு சீட் வழங்கமாட்டோம் என சிறிசேனவின் சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்து வந்தது. ஆனால் ராஜபக்சே தாம் தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்திருந்தார்.
இதனால் அவர் சுதந்திரக் கட்சியை உடைத்து தனிக் கட்சி தொடங்குவாரா? அல்லது வேறு ஒரு கட்சியின் சார்பாக போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு சீட் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக அதன் பொதுச்செயலர் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.