ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
சிட்னி: கொரோனா முதல் அலையை மிக எளிதாக சமாளித்த ஆஸ்திரேலியா, டெல்டா வைரஸ் மாறுபாடு காரணமாக கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கணிசமாக இருந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னியில் பாதிப்பு அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
இது போதாதென்று தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஓமிக்ரான் ஆஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது ஓமிக்ரான் காரணமாக கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா ஏற்கனவே தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தி வந்தது. 16 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேருக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 70% குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஜனவரி 10-ம் தேதி முதல் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டார்.
''தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை விரும்பும் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு இது வரவேற்கத்தக்க செய்தியாக இருக்கும்'' என்று ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார்.
'தடுப்பூசி போடாமல் ஊர் சுற்றுகிறார்'.. அகிலேஷ் யாதவை கடுமையாக தாக்கி பேசிய யோகி ஆதித்யநாத்!