மத்திய பிரதேசத்தின் குணாவில் ₹1,060 கோடி மதிப்பிலான சிமெண்ட் ஆலை.. பணிகளை தொடங்கிய அதானி குழுமம்!
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் ₹1,060 கோடி முதலீட்டில் புதிய சிமெண்ட் அரைக்கும் பிரிவுக்கு அதானி குழுமம் சனிக்கிழமை அடிக்கல் நாட்டியது. அதானி சிமெண்ட் நிறுவனம் உருவாக்கவுள்ள இப்பிரிவு, சுமார் 1,500 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பிரதமர் கதி- சக்தி திட்டத்தின் கீழ் மாநிலத்தின் கட்டமைப்பு, தளவாட மற்றும் தொழில் வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
பூமி பூஜை நிகழ்வில் பிரணவ் அதானி பேசுகையில், முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் தலைமையின்கீழ், PM கதி-சக்தி திட்டத்தால் உள்கட்டமைப்பு மேம்பட்டு, மத்தியப் பிரதேசம் சிறந்த முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளது என்றார். இத்திட்டம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை விரைவுபடுத்துவதில் முக்கியப் பங்களிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், தொழில் பிரதிநிதிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். இந்தியாவின் நீண்டகால வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், அதானி குழுமம் எரிசக்தி, கட்டமைப்பு, தளவாடங்கள், பசுமைத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் செயல்பட்டு வருவதாக பிரணவ் அதானி எடுத்துரைத்தார்.
முன்னதாக போபாலில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்தியப் பிரதேசத்தில் ₹1.1 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் உறுதியளித்தது. நீர் சேமிப்பு, சிமெண்ட், சுரங்கம், ஸ்மார்ட் மீட்டர்கள் மற்றும் அனல் மின்சக்தி உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் இந்த முதலீடு, 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
குணா சிமெண்ட் அரைக்கும் பிரிவு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டு, ஆண்டுக்கு 40 லட்சம் மெட்ரிக் டன்கள் உற்பத்தித் திறன் பெறும். முதல் கட்டப் பணிகள் 2028க்குள் செயல்படத் தொடங்கும். இத்திட்டம் வேகம், தரம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் என அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பிரிவு, காலப்போக்கில் மாநில கருவூலத்திற்கு ₹6,000 கோடிக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தரும் என பிரணவ் அதானி குறிப்பிட்டார். போக்குவரத்து, விநியோகச் சங்கிலிகள், சிறு வணிகங்கள் மூலம் பிராந்திய பொருளாதாரம் மேம்படும் என்றார். கட்னி மாவட்டத்தின் அமேதா மற்றும் கைமோர் ஆலைகள் வழியாக அதானி குழுமம் மத்திய பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க அளவில் செயல்படுகிறது.
அதானி பவர் தற்போது மாநிலத்திற்கு 1,200 மெகாவாட் மின்சாரம் வழங்குகிறது.. மேலும் 5,600 மெகாவாட் கூடுதல் உற்பத்தித் திறனுக்கான பணிகள் நடக்கின்றன. லஹோரி, தார், ரத்லாம் மற்றும் உஜ்ஜைனில் காற்றாலை மின் திட்டங்களையும் குழுமம் செயல்படுத்தியது. உஜ்ஜைனில் மற்றொரு சிமெண்ட் ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் மத்தியப் பிரதேசம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான முதலீடு என பிரணவ் அதானி தெரிவித்தார். மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் அதானி குழுமம் தொடர்ந்து துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.












Click it and Unblock the Notifications