நாகர்கோவில் அருகே கார் விபத்து: பிரதமர் மோடியின் உறவுக்கார பெண் பலி
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே நிகழ்ந்த கார் விபத்தில், பிரதமரின் உறவுக்காரப் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம், ஜினார்க் கார்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவி டிவிபென் வறீயா (49). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரானாவார். ஆன்மிக சுற்றுலாவிற்காக தனது குடும்பத்தினருடன் தமிழகத்துக்கு கார் மூலம் இவர் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு காரில் வந்தனர்.

பணகுடி - காவல் கிணறு சாலையில் உள்ள புண்ணிய வாளன்புரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் டிவிபென் வறீயா, அவரது கணவர் பாபுலால், கார் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிவிபென் வறீயா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் டிவிபென் வறீயா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் குஜராத் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications