வெளி மாநிலத்திற்கு நீட் எழுத சென்ற மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள்: பொன்.ராதாகிருஷ்ணன்
மாநிலம் தாண்டி செல்லும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க எனது அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Recommended Video
நாகர்கோவில்: நீட் தேர்வு மைய ஒதுக்கீடு விவகாரத்தில் 1 சதவீதம் தவறு நடந்துள்ளது, 99 சதவீதம் சரியாக நடந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில், மத்திய அரசின் கிராம தன்னாட்சி இயக்க தொடர் நிகழ்ச்சி மற்றும் திறன் மேம்பாடு தினம் நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டி:
தமிழக மாணவர்களுக்கு பிற மாநிலத்தில் நீட் தேர்வு மையம் அமைக்காமல் பக்கத்திலேயே அமைத்திருந்தால் வீட்டில் இருந்தே அவர்கள் தேர்வு எழுத சென்றுவர வசதியாக இருந்திருக்கும் என்பதே எனது கருத்து. சிலர் விருப்பத்தின் பேரிலும் அண்டை மாநில மையங்களுக்கு சென்றுள்ளதை மறுக்க முடியாது.
மாநிலம் தாண்டி செல்லும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க எனது அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசியல் செய்கின்றனர். மாணவர்களுக்கும் அரசுக்கும் எந்தப் போட்டியும் இல்லை. ஆனால், அதைப்போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. சீமான், ஸ்டாலின் போன்றோர் தமிழகத்தில் அறிக்கை வெளியிடும் அரசியல் கட்சி தலைவர்களாக இருந்து வருகின்றனர்.
நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ 99 சதவீதம் சரியாக பணியாற்றி உள்ளது. ஆனால், ஒரு சதவீதம் மட்டுமே தவறு நடந்துள்ளது. அந்த தவறு மட்டுமே பெரிதாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.