செயல் இழந்தது மாயமான டோர்னியரின் கருப்பு பெட்டி..விமானியின் தந்தை கேள்வி கேட்டு பிரதமருக்கு கடிதம்..
சென்னை: மாயமான ‘டோர்னியர்' விமானத்தின் கருப்பு பெட்டி செயல் இழந்ததையடுத்து, விமானி சோனியின் தந்தை விமானத்தை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த மாதம் 8-ந் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ‘டோர்னியர்' விமானம் 3 பேருடன் மாயமானது. விமானத்தில் இருந்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி மற்றும் கடலோர காவல்படை அதிகாரி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
விமானம் விழுந்ததாக கூறப்படும் சிதம்பரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படை கப்பல்களும், இந்திய கப்பல் படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்றுடன் (புதன்கிழமை) விமானம் காணாமல்போய் ஒரு மாதம் ஆகிறது. ஆனால் தேடுதல் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மாயமான விமானத்தில் பயணம் செய்த விமானிகளின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த விமானத்தை இயக்கிய துணை விமானி எம்.கே.சோனியின் தந்தை ரதீஷாம் சோனி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டுக்காக சேவை செய்யச் சென்ற என்னுடைய மகன் கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானத்துடன் மாயமாகி ஒரு மாதமாகிறது. மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் செத்துவருகிறோம். மாயமான விமானத்தை கண்டுப்பிடிக்க வெளிநாடுகளின் உதவியைக்கூட கேட்டு பெறலாம்.
நாங்கள் கேட்க விரும்பும் 3 கேள்விகள்,
1. விமானம் மாயமாகி 30 நாட்கள் ஆகிறது, இதுவரை என்ன செய்தீர்கள்? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?
2. விமானத்தை தேடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உரிய கருவிகள் நம்மிடம் உள்ளதா? அடுத்து இதுபோன்று ஒரு விமானம் மாயமானால் என்ன செய்வீர்கள்? என்பதை வெளிப்படையாக கூறுங்கள்.
3. கடற்படையில் இனி பணிக்கு சேரலாமா? வேண்டாமா? அவ்வாறு பணிக்கு சேர்ந்து இதுபோன்று விமானம் மாயமானால், அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தான் நீங்கள் எங்களுக்கு அளிக்கும் பரிசா?
மாயமான விமானத்தை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கையை இனியும் தாமதிக்காமல் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
மாயமான விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் இருந்து வந்த அதிர்வுகளை வைத்து சிதம்பரம் அருகே கடலில் விழுந்து இருக்கலாம் என்று கண்டறிந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அந்த கருப்பு பெட்டி ஒரு மாதம் மட்டுமே செயல்படும் திறன் கொண்டது.
விமானம் மாயமாகி 30 நாட்கள் ஆகிவிட்டதால் கருப்பு பெட்டி முற்றிலும் செயலிழந்துவிட்டது. இதனால் கருப்பு பெட்டியில் இருந்து வரும் அதிர்வுகள் உதவியுடன் விமானத்தை கண்டுபிடிப்பதில் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ‘‘சீஸ் மேட்டிக்'' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் மாயமான விமானத்தை தேடும் பணியை தொடங்க வேண்டும் என்று விமானிகளின் குடும்பத்தினர், மத்திய அரசுக்கும், ராணுவ அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பரிசீலித்து வருவதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.