அதிமுக ஆதரவு தேமுதிக, பாமக, பு.த எம்.எல்.ஏக்கள் 10 பேர் திடீர் ராஜினாமா!
சென்னை: தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அப்போது 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன் மற்றும் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்து திட்டக்குடி எம்.எல்.ஏ-வாக ஆன தமிழழகன் ஆகியோர் முதல்வரை 2013-ம் ஆண்டு சந்தித்தனர்.

தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்ததாக கூறிய அவர்கள், தேமுதிக தலைமையை விமர்சித்தனர். அன்று முதல் அவர்கள் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகவே இருந்து வந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, பேராவூரணி எம்எல்ஏவான நடிகர் அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன் என்று அடுத்தடுத்து எம்.எல்-ஏக்கள் முதல்வரைச் சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர். திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியமும் சென்றாண்டு முதல்வரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினார்.
தேமுதிக அவைத் தலைவராக இருந்தவரான பண்ருட்டி ராமச்சந்திரனும் இதில் முக்கியமானவர். ஆனால் இவர் தேமுதிகவை விட்டு விலகியதுமே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
இதேபோல், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ ராமசாமி மற்றும் பாமகவை சேர்ந்த எம்.எல்.ஏ. கலையரசனும் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிமுகவிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அதிமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த, இந்த 10 எம்.எல்.ஏக்களும் அதிரடியாக இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தங்களது ராஜினாமா கடிதத்தையும் இவர்கள் சபாநாயகர் தனபாலிடம் அளித்துள்ளனர்.
இவர்கள் அடுத்து முறைப்படி அதிமுகவில் இணைவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications