நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் கண்கள் தானம்..தென்காசி அருகே நெகிழ்ச்சிச் சம்பவம்
தென்காசி: தென்காசி அருகே நீரில் மூழ்கி இறந்த சிறுவனின் கண்கள் தானமாக தரப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது கீழப்பாவூர். இங்குள்ள ராஜேஸ்வரி தெருவை சேர்ந்த வைகுண்டராஜ் என்பவரது மகன் முத்துச்செல்வன் (11). இவன் பாவூர்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
சிலதினங்களுக்கு முன் முத்துசெல்வன் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஊரணியில் குழிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் சென்று தண்ணீரில் சிக்கிக்கொண்ட முத்துச்செல்வன் வெளியே வரமுடியாமல் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த ஊரணியில் குளித்துக்கொண்டிருந்த மற்ற நபர்கள் முத்துச்செல்வனை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசெல்வன் பரிதாபமாக இறந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தினர் மற்றும் கண்தான விழிப்புணர்வு குழுவினர் இறந்த முத்துசெல்வனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவனது தந்தை வைகுண்டராஜை சந்தித்து சிறுவனது கண்களை தானமாக வழங்கினால் இறந்த உங்கள் மகனின் கண்கள் வாழும் என்று கூறினர். இதனை ஏற்ற வைகுண்டராஜ் தனது மகன் இறந்த கொடூமையான நிலையிலும் அவனது கண்களை தானமாக வழங்க ஒப்புக்கொண்டார்.
இதனை தொடர்ந்து நெல்லை கண் மருத்துவமனைமருத்துவர்கள் விரைந்து வந்து மாணவன் முத்துசெல்வனின் கண்களை தானமாக பெற்று சென்றனர். இறந்த மாணவனின் கண்களை தானமாக வழங்கிய மாணவனின் தந்தை வைகுண்டராஜை மருத்துவர்கள் மற்றும் அனைவரும் பாராட்டினர்.