ஹோமோ செக்ஸ்க்கு மறுப்பு: 6ம் வகுப்பு மாணவனைக் கொன்ற 10ம் வகுப்பு மாணவன் கைது
திண்டுக்கல்: ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காமல், அசிரியரிடம் கூறி விடுவதாக மிரட்டிய 6ம் வகுப்பு மாணவனை கொடூரமாக கழிவு நீர்த் தொட்டியில் தள்ளி கொலை செய்த 10ம் வகுப்பு பயிலும் மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாஜி சாலை கொண்டம்மன் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி கருணாகரனின் மகன் 11 வயது ஹரிபிரசாத். இவன் விடுதியில் தங்கி திண்டுக்கல் அருகேயுள்ள ம.மு.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 7-ந்தேதி காலை விடுதி அறையில் இருந்து மாணவன் தனது நண்பர்களுடன் வெளியில் சென்ற ஹரிபிரசாத், பின்னர் விடுதி திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மகனைக் காணவில்லை என அவனது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹரியைத் தேடி வந்தனர்.
இதற்கிடையே பள்ளிக்கூட விடுதியின் கழிப்பறை அருகில் உள்ள கழிநீர் தொட்டியில் ஹரிபிரசாத்தின் உடல் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாணவன் ஹரிபிரசாத்தின் நெருங்கிய நண்பர்களிடமும், மற்றும் அவன் காணாமல் போன அன்று யாருடன் கடைசியாக வெளியே சென்றான் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, ஹரியின் விடுதியில் தங்கி இருந்த திண்டுக்கல் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வகுப்பு பயிலும் 15 வயது மாணவன் முண்ணுக்குப் பின் முரணான தகவல்களை அளிக்கவே, சந்தேகமடைந்தனர் போலீசார்.
மேற்கொண்டு அவனிடம் நடத்திய விசாரணையில் அம்மாணவன் அடிக்கடி கட்டாயப் படுத்தி ஹரியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், சம்பவத்தன்று ஹரி ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆசிரியரிடம் கூறி விடுவதாக மிரட்டியதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆத்திரத்தில் ஹரியை பள்ளியில் உள்ள கழவுநீர் தொட்டியில் தள்ளி கொலை செய்ததை அம்மாணவன் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனையடுத்து அம்மாணவனை, தாலுகா போலீசார் கைது செய்தனர்.
ஓரினச்சேர்க்கைக்கு சம்மதிக்காததால் 11 வயது மாணவனை மற்றொரு மாணவனே கொலை செய்தது கேள்விப்பட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications