சசிகலா தரப்பில் வெறும் 119 எம்.எல்.ஏக்கள்தான்.. போலீஸே சொல்லி விட்டது!
அதிமுகவைச் சேர்ந்த 119 எம்எல்ஏக்களின் ஆதரவு சசிகலாவிற்கு இருப்பதற்கான கடிதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலாவை ஆதரிப்பதாக 119 அதிமுக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக பதவி ஏற்க கனவு கண்டு வரும் நிலையில், அதற்கான அழைப்பை ஆளுநர் எப்போது விடுப்பார் என்று காத்திருக்கிறார். சசிகலா முதல்வராவது தொடர்பான வழக்கில் 119 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

கூவத்தூரில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் 119 எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதாகவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் எம்எல்ஏக்கள் அனைவரையும் நேரில் ஆஜர்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசு வழக்கறிஞர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் பெரும்பான்மையை நிரூபிக்க எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நடத்த முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீதிமன்றம் சட்ட ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு கோரியுள்ளார்.
மெஜாரிட்டிக்குத் தேவை 117 எம்.எல்.ஏக்கள். அதை விட வெறும் 2 பேர்தான் சசிகலா தரப்புக்குக் கூடுதலாக இருக்கிறார்கள். இருப்பினும் இதில் எத்தனை பேர் உண்மையாகவே சசிகலா பக்கம் இருக்கிறார்கள் என்பது சந்தேகம்தான்.












Click it and Unblock the Notifications