ஸ்டான்லி மருத்துவமனையில்எறும்பு கடித்து 12 வயது சிறுவன் பலி: உறவினர்கள் போராட்டம்!
சென்னை: எறும்பு கடித்ததாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொடுங்கையூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அமுலு. நடைபாதையில் வசித்து வரும் இத்தம்பதியினர், தங்களது 12 வயது மகன் சுதாகரை ராயபுரம் தனியார் இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்தனர்.
5-ம் வகுப்பு படித்து வந்த சுதாகர் கடந்த 10-ம் தேதி காலையில் குளித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்து இருக்கிறார். அப்போது டவலில் இருந்த கட்டெறும்பு சிறுவனின் கன்னம் மற்றும் கண்களில் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சுதாகரின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டது.
உடனடியாக இல்ல நிர்வாகிகள் சுதாகரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்கள், ‘எறும்பு கடித்தால் யாராவது உயிரிழப்பார்களா?' எனக் கூறி சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சிறுவனின் உடலை வாங்கிச் சென்றனர்.
சிறுவனின் மரணம் தொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், "எறும்பு கடித்ததாகத்தான் சிறுவன் அனுமதிக்கப்பட்டான் ஆனால் சிறுவனின் உடலில் பல இடங்கள் வீங்கிவிட்டன. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பல னின்றி இறந்துவிட்டார். எறும்பு கடித்ததா அல்லது வேறு ஏதாவது பூச்சி கடித்ததா என்பதை அறிய சிறுவனின் உடலில் இருந்து தோல் மற்றும் சதைகளை பரிசோத னைக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவு வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்" என்றனர்.












Click it and Unblock the Notifications