பூந்தமல்லி அருகே முன்விரோதம் காரணமாக +2 மாணவனுக்கு கத்தி குத்து - தப்பி ஓடிய நண்பனுக்கு போலீஸ் வலை
நண்பனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவனை போலீஸ் தேடி வருகிறது.
பூந்தமல்லி: மாங்காடு அருகே அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக மாணவனே இந்த வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளது கூடுதல் அதிர்ச்சியை தந்துள்ளது.
மாங்காடு அடுத்த பட்டூரை சேர்ந்தவர் சேக்ஜமீல். இவரது மகன் சேக் சமீருதீன் 17, மாங்காடு அடுத்த கோவூரில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தான்.
12 ம் வகுப்புக்கு தேர்வு நடந்து வரும் நிலையில் இன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது இதே பள்ளியில் படித்து வந்த தண்டலத்தை சேர்ந்த அபிமன்யு 18, என்ற மாணவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேக்சமீருதீன் வயிற்றில் குத்தினார்.
பெற்றோர் வருகை
இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதில் வயிற்றில் கத்தி பாய்ந்த நிலையில் வலியால் துடித்த சேக்சமீருதீன் பள்ளியின் வாயில் முன்பு வந்து விழுந்துள்ளான். கடைசி தேர்வு முடித்து மகன் வருவான் என காத்துக்கொண்டிருந்த அவனது பெற்றோர் கத்திக்குத்துடன் வருவதை கண்டு அலறி துடித்தனர். கதறியபடியே ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேடுதல் வேட்டை
அரசு பள்ளியில் தேர்வு நடைபெற்று வந்ததால் பள்ளியின் முன்பு மாங்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் கத்தியால் குத்திய அபிமன்யுவை பிடிக்க முயன்றனர். ஆனால் பள்ளியின் பின்புறமாக தப்பி ஓடி விட்டான். இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் அந்த மாணவனை தேடி வருகின்றனர்.
பழிக்கு பழி...
இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில், மாணவர்கள் இருவருக்குமிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளதாகவும், சமீபகாலமாக இருவரும் ஏரியா, விட்டு ஏரியா சென்று ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன் காரணமாக பழி தீர்க்கவே தேர்வு முடிந்து வெளியே வந்த தன் நண்பனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இச்சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
கவுன்சிலிங் தேவை
தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் சிலரின் செயலை பார்த்தால் இது தமிழ்நாடு தானா? நாம் தமிழர்கள்தானா? என்ற சந்தேகம் வருகிறது. மாணவர்களுக்கு இத்தகைய வன்முறை போக்குக்கு சமூக ஊடகங்களும், தொலைக்காட்சிகளும்தான் முக்கிய காரணமாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. அதேபோல, பள்ளிகளில் மாணவர்களின் உடமைகளை தினமும் சோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களுக்கு மனவளம் பற்றி போதிப்பதுடன், அவர்களது வாழ்வியல் முறையினை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க பெற்றோர், மற்றும் ஆசிரியர்கள் முயல வேண்டும்.