இளவரசன் முதலாமாண்டு நினைவு தினம்… தர்மபுரியில் 144 தடை
தர்மபுரி: தர்மபுரி இளவரசனின் முதலாமாண்டு நினைவு தினம் ஜூலை 4ம் தேதி வருவதால் தர்மபுரியில் 2 வாரங்களுக்கு போலீஸ் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் மேனகா பிறப்பித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் இளவரசனின் நினைவு தினத்தை கடைபிடிக்க அனுமதி கோரியிருந்தன. ஆனால் இதற்கு அனுமதி அளித்தால் அமைதிக்கு பங்கம் வரும் என கருதிய கோட்டாட்சியர் தர்மபுரி தாலுகாவிற்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தர்மபுரி இளவரசன்
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இளவரசன் மற்றும் திவ்யா. தலித் வகுப்பைச் சேர்ந்தவர் இளவரசன். வன்னியர் வகுப்பைச் சேர்ந்தவர் திவ்யா. இருவரும் காதல் கொண்டனர். இந்தக் காதல் திவ்யா குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூண்டது ஜாதிக் கலவரம்
இந்த நிலையில் திவ்யாவின் தந்தை மரணமடைந்தார். இதனால் வன்னியர் வகுப்பினர் ஆவேசம் அடைந்தனர். தலித் வகுப்பினர் வசித்து வந்த கிராமத்தில் தாக்குதல் தொடுத்தனர். பல குடிசைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அந்தக் கிராமமே நிர்மூலமாக்கப்பட்டது.
திடீரென இளவரசனைக் கைவிட்ட திவ்யா
இந்த நிலையில் இளவரசனுடன் ஒன்றாக இருந்து வந்த திவ்யா அரசியல் நெருக்கடிகள் மற்றும் உறவுகளின் நெருக்கடி காரணமாக இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. தனது தாயுடன் கடைசி வரை இருக்க விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்தார்.
மறு நாளே தற்கொலை
அதுவரை திவ்யாவை முழுமையாக நம்பியிருந்த இளவரசன், திவ்யாவின் இந்த அறிவிப்பால் மனம் உடைந்தார். துயரத்தில் மூழ்கினார். தர்மபுரி திரும்பினார். அங்கு கலைக் கல்லூரிக்குப் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் இளவரசனின் பிணம் அடுத்த நாள் கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும் பதட்டம்
இளவரசனின் மரணம் பின்னர் தற்கொலைதான் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இளவரசனின் விவகாரம் இவ்வளவு சோகமாக முடிந்தது அனைவரையும் அதிர வைத்தது.
இளவரசன் தற்கொலை செய்து கொண்டு வருகிற ஜூலை 4 ம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில்தான் தர்மபுரியில் போலீஸ் தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.