தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்! 4 நாட்களுக்கு உச்சபட்ச கெடுபிடி!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் வருகை தர உள்ளனர்.

பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிகளின் போது பல்வேறு அமைப்பினர் கூடும் நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி அதிகமானோர் கூடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்துக்குள் வாள், கத்தி, கட்டைகள், கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவையும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications