உடுமலைப்பைட்டை தலித் இளைஞர் படுகொலை... கைதான 5 பேருக்கு 15 நாள் சிறை
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் 15நாள் சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலைப்பேட்டையில் காதல் மணம் புரிந்த தலித் வகுப்பைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி கவுசல்யாவை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் சங்கர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த ஜாதிவெறிக் கொலைச் சம்பவம் நாட்டையே பதற வைத்து விட்டது. இந்த கொலை தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பெயர் விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும் திருப்பூர் எஸ்பி கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைதான 5 பேரை உடுமலைப்பேட்டை நீதிபதி ஸ்ரீவித்யா வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் ஐந்து பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னொரு நபருக்கு வலை வீச்சு
இந்தக் கொலை வழக்கில் தன்ராஜ் என்ற நபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவர், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி போலீஸில் சரணடைந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications