ஈரான் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை: இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
ஈரான் நாட்டு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை: ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ், கிருபா, வர்கேஷ் வர்மா, ஸ்ரீஜித், ஸ்ரீன்னு உள்பட 15 மீனவர்கள் 15 மீனவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி பக்ரைன் நாட்டிலிருந்து விசைப்படகு ஒன்றில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது, கடல் எல்லையை தாண்டியதாக கூறி ஈரான் நாட்டு கடற்படையினர் அவர்களை கைது செய்து படகிலேயே சிறை வைத்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களை விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் அபராதத்தை செலுத்திய போதிலும், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களை மீட்க வேண்டுமென கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனை அடுத்து வெளியுறவு துறை அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை ஈரான் அரசு விடுதலை செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை செய்யபட்ட மீனவர்களை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .












Click it and Unblock the Notifications