16 ஆடுகள் கத்திக் குத்தால் சாவு: பொதுமக்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 16 ஆடுகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளன. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியபுரம் சீதாராமன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை பட்டி போட்டு வளர்த்து வருகிறார். அவரிடம் 70 செம்மறி ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பொன்னுசாமியின் பட்டியில் இருந்த இரும்புக் கூண்டு காணாமல் போனது.
இது குறித்து அவர் அதே ஊரைச் சேர்நத முருகன் என்பவர் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் பொன்னுசாமி வீட்டுக்கு வந்து என் மீது எப்படி புகார் செய்யலாம் என்று கேட்டதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாலையில் பொன்னுசாமி ஆடுகளுக்கு புல் வைக்க சென்றார். அப்போது பட்டியின் மேல்புறத்தில் 5 ஆடுகள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சிறிது தூரம் சென்று பார்த்தபோது மேலும் 11 ஆடுகள் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொன்னுசாமியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. சாலை மறியலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.