புதுச்சேரி: பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற 16 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் புதுவை வரும் குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீட்க வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரணாப் முகர்ஜி புதுவைக்கு வந்தபோது அண்ணாசாலையில் திரண்ட மாணவர்கள் கருப்புக் கொடி காட்ட ஆயத்தமானார்கள். மேலும் லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையத்தை நோக்கி பேரணியாகவும் கிளம்பினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற 16 பேரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.