விழுப்புரம்: ரவுடி ‘மின்னல்’ ராஜா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை
விழுப்புரம்: ரவுடி மின்னல் ராஜா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் மின்னல் ராஜா பிரபல ரவுடியான இவரை கடந்த 24.2.2005 அன்று அவரது வீட்டின் அருகே ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை தொடர்பாக விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரவி அலெக்ஸ், செங்குட்டுவன், அறச்செல்வன், துரை, மணிகண்டன், ரஞ்சித், கோபி, செழியன், பிரேம்குமார் உட்பட 20 பேரை கைது செய்தனர்.
இவ் வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கைப்பை மணிகண்டன் கடந்த 2010 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு பிரேம் விபத்தில் சிக்கி இறந்தார். 2012 ஆம் ஆண்டில் செழியன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இறந்து போனவர்கள் 3 பேரை தவிர மற்ற 17 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இந்த கொலை வழக்கில் போதிய ஆதாரம் நிரூபிக்கப்படாததால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications