போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது.. சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து, போலியாக பாஸ்போர்ட் தயாரித்து கனடா செல்ல முயன்ற 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் வடமாநிலத்தை சேர்ந்த மூன்று பெண்களும் அடங்குவர்.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கமான பாஸ்போர்ட் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, 3 பெண்கள் உட்பட 19 பேரும் கனடா செல்ல உள்ளதாக கூறி தங்களது பாஸ்போர்ட்டையும் அதிகாரிகளிடம் காட்டினர்.
ஆனால் அவற்றை பரிசோதித்த அதிகாரிகள் 19 பேர் வைத்திருந்ததும் போலியான பாஸ்போர்ட் என கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை அங்கிருந்த போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
விசாரணையின் துவக்கத்தில் தங்களை ஒரு நடன குழுவினர் என்று 19 பேரும் காட்டி கொண்டனர். ஆனால் அதுவும் உண்மையில்லை என்பதும், 19 பேரும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலிடமிருந்து பாஸ்போர்ட்டை வாங்கியுள்ளதும் தெரியவந்தது. இதை தவிர, போலி பாஸ்போர்ட்டுக்காக 19 பேரும் ஒரு கும்பலிடம் தலா 1 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.
இதில் 3 பெண்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த கும்பலையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.