எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: 499 மதிப்பெண்களுடன் 18 மாணவிகள், 1 மாணவர் முதலிடம்
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9-ந்தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
இத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி, 499 மதிப்பெண்கள் பெற்று 19 மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்த 19 பேரில் 18 பேர் மாணவிகள். ஒரே ஒரு மாணவர் மகேஷ். இவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். முதலிடம் பிடித்த 19 பேரில் 8 பேர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அதனைத் தொடர்ந்து 498 மதிப்பெண்களுடன் 120 பேர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். இதில் 5 பேர் தர்மபுரியைச் சேர்ந்த ஒரே பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3வது இடத்தில் 497 மதிப்பெண்களுடன் 321 பேர் உள்ளனர். இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 90.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கம் போல், இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தூத்துக்குடி 'முத்துக்கள்'
முதலிடம் பிடித்தவர்களில் தூத்துக்குடியைச் சேர்ந்த அனிதாவும் இடம் பெற்றுள்ளார். இவர் அனிதாகுமரன் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்தவர்.
அதேபோல 2வது இடம் பிடித்தவர்களில் 6 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
3வது இடம் பிடித்த மாணவச் செல்வங்களில் 14 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள்.
திருப்புவனம் சிவரஞ்சனி
திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனதைத் சேர்ந்த மாணவி சிவரஞ்சனி பத்தாம் வகுப்புத் தேர்வில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
எஸ். சிவரஞ்சனி மொத்தம் 500க்கு 497 மதிப்பெண்ளைப் பெற்று மாநில அளவில் 3வதாக வந்த மாணவச் செல்வங்களில் ஒருவராக வந்துள்ளார். இவர் திருப்புவனம் வேலம்மாள் பள்ளி மாணவி ஆவார்.
இவர் தமிழில் 98, ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். இதுதவிர கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய படங்களில் தலா 100 மதிப்பெண்களைப் பெற்று பெற்றோருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.