19வது நாளாக கொந்தளிப்பில் நெடுவாசல்... அழுது ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 19வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் அழுது ஒப்பாரி வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் மக்கள் 19வது நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை எதிர்த்து 19வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெடுவாசலை சுற்றியுள்ள கிராம மக்கள் அணியணியாக சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்பினரும், விவசாயிகள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இந்தப் போராட்டத்தை ஆதரித்து வருகின்றனர்.
பெண்கள் ஒப்பாரி
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் போராட்டத்தின் 19வது நாளான இன்று பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் செய்தனர். அப்போது எங்கள் மண், எங்கள் விவசாயம் எங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் உறுதியாய் தெரிவித்தனர்.
உயிர் போனாலும்…
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் உயிர் போனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். "நாங்கள் ஜெயித்து காண்பிப்போம். மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் வரும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என்று முதிய பெண்கள் முதல் இளைய பெண்கள் வரை உறுதியேற்று போராட்டக்களத்தில் நின்று வருகின்றனர்.
முழிக்கும் பாஜக…
மக்களின் உறுதியான போராட்டத்தைக் கண்டு இதனை எப்படி அடக்குவது என்று மத்தியில் ஆளும் பாஜக அரசு முழித்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் தமிழிசையும், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் தலையால் தண்ணி குடித்தாலும், நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு முன் ஒன்று எடுபடுவதாயில்லை.
நெடுவாசலைத் தொடர்ந்து…
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 19 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் நடக்கும் போராட்டம் ஒரு சங்கிலி தொடர் போல நல்லாண்டார் கொல்லை, கீரமங்கலம், வடகாடு, வாணக்கன் காடு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.