உரிய ஆவணங்கள் இல்லாமல் தத்தெடுக்கப்பட்ட 2 குழந்தைகள்- அரசு காப்பகத்தில் ஒப்படைப்பு!
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தத்து கொடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவர் 2 ஆண் குழந்தைகளை வளர்த்து வருவதாகவும், அந்த குழந்தை பணத்திற்கு வாங்கப்பட்டதாகவும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.
அதன்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் உத்தரவுப்படி அலுவலர்கள் சுகந்தவள்ளி, செல்வம் ஆகியோர் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் உதவியுடன் குடிசைமாற்று வாரிய குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது 2 ஆண் குழந்தைகளை வளர்த்து வரும் பெண்ணின் பெயர் தேவி என்றும், இவருடைய கணவர் பாஸ்கர் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தேவியிடம் போலீசாரும், அலுவலர்களும் விசாரணை நடத்தியபோது, தனக்கு குழந்தை பிறக்காததால் குழந்தையை வேறொருவரிடம் இருந்து வாங்கி வளர்த்து வருவதாக தெரிவித்தார்.
பின்னர் 2 ஆண் குழந்தைகளையும் மீட்டு, தேவியையும் அலுவலர்கள் ஆட்டோவில் அழைத்து கொண்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு தேவியிடம் அதிகாரி நடராஜன் விசாரணை நடத்தியபோது, "இந்த குழந்தைகளை நான் விலைக்கு வாங்கவில்லை. அந்த குழந்தைகளின் பெற்றோரே விரும்பி தான் என்னிடம் தத்து கொடுத்தனர். நான் முதல் குழந்தையுடன் 2 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.
என்னை இப்போது தான் அம்மா என்று அழைக்க தொடங்கி இருக்கிறது. இதனால் குழந்தையை நான் கொடுக்கமாட்டேன். அவன் இல்லாமல் என்னால் வாழ முடியாது" என்று கதறி அழுதார்.
ஆனால் உரிய ஆவணம் இன்றி குழந்தையை தத்தெடுக்க சட்டத்தில் வழிவகை இல்லை என்று கூறிய அதிகாரிகள், தேவியிடம் வளர்ந்த 2 குழந்தைகளையும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டு தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு குழந்தைகளும் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications