"ராசாத்தி" எனக்கா இல்லை உனக்கா?.. பெண் போலீஸுக்காக வீட்டு முன்பு கட்டி உருண்ட 2 ஏட்டுக்கள்!
விருதுநகர்: விருதுநகரில் பெண் போலீஸ்காரர் யாருக்குச் சொந்தம் என்ற சண்டையில் அந்தப் பெண் போலீஸ்காரர் வீட்டு முன்பு கூடி நடு ரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர் இரண்டு தலைமைக் காவலர்கள். இதையடுத்து இருவரையும் இடமாற்றம் செய்துள்ளார் மாவட்ட எஸ்.பி.
விருதுநகர் காவல்நிலையம் ஒன்றில் பணிபுரியும் பெண் போலீஸ்காரர் ராசாத்தி (நிஜப் பெயர் அல்ல). இவருக்குத் திருமணமாகி விட்டது. லட்சுமி நகரத்தில் வசித்து வருகிறார்.
இவர் தன்னுடன் பணியாற்றும் ஒரு ஏட்டு மற்றும் எஸ்பி ஆபீஸில் வேலை பார்க்கும் இன்னொரு ஏட்டு என ஒரே நேரத்தில் இரண்டு பேருடனும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் இந்த இரண்டு ஏட்டுக்களுக்கும் ராசாத்தி எனக்குத்தான் சொந்தம் என்று அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பு, விடுமுறையில் இருந்த ராசாத்தி வீட்டுக்கு நள்ளிரவில், எஸ்.பி. ஆபீஸ் ஏட்டு வந்துள்ளார். தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே போய் விட்டார். அந்த சமயம் பார்த்து ராசாத்தியுடன் பழகி வந்த இன்னொரு ஏட்டு அந்தப் பக்கமாக வந்தார். ராசாத்தி வீட்டின் ஓரமாக எஸ்.பி ஆபீஸ் ஏட்டின் டூவிலர் இருப்பதைப் பார்த்து அவர் கடும் கோபமடைந்தார்.
வேகமாக வந்த அவர் அந்த டூவீலரை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து விட்டார். பின்னர் வீட்டுக்குள் போய் அங்கே ராசாத்தியுடன் இருந்த அந்த ஏட்டையும் சரமாரியாக அடித்தார். பதிலுக்கு அவரும் அடித்தார். இருவரும் அடித்துப் புரண்டபடி நடு ரோட்டுக்கு வந்து வீட்டு முன்பாக கட்டி உருண்டுள்ளனர்.
இவர்களின் அடிபுடியைப் பார்த்து அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் விலக்கி விட்டனர். கூட்டம் வந்ததும் இருவரும் அங்கிருந்து வேகமாக போய் விட்டனர்.
சம்பவம் குறித்து எஸ்.பி. மகேஸ்வரனுக்குத் தகவல் போனது. அடுத்த நாள் காலையில் இருவரையும் அழைத்து விசாரித்தார் எஸ்.பி. பின்னர் ஒருவரை இருக்கங்குடி காவல் நிலையத்துக்கும், இன்னொருவரை ஆயுதப்படைக்கும் மாற்றி உத்தரவிட்டார்.
ஆமா, ராசாத்தி வீட்டுக்காரர் எங்கே?
இவ்வளவு அடிதடி நடந்த நிலையில், அந்த சமயத்தில், ராசாத்தியின் வீட்டுக்காரர் எங்கே போயிருந்தார் என்ற விவரம் தெரியவில்லை.