10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. அண்ணன், தம்பி கைது
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சேலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம்: 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்,அண்ணன் தம்பி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகிலுள்ள குள்ளவீரன்பட்டி பஞ்சாயத்து, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் பழனிமலை. இவரின் மகன்கள் மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.
மணிகண்டனும் வேல்முருகனும், மேட்டூரில் உள்ள ஒரு பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, பத்தாம் வகுப்புப் படிக்கும் 15 வயது மாணவி, பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு தன்னுடைய வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அதைக் கவனித்த வேல்முருகன் அம்மாணவியை பின்தொடர்ந்து சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக, மணிகண்டனும் உடன் சென்று, மாணவியை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் உள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து அவரின் பெற்றோர்களிடம் புகார் கூறியுள்ளார். அவர்களின் புகாரின் பேரில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சகோதரர்களை மேட்டூர் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.