சென்னையில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி, 3 பேர் படுகாயம்- வங்கி மேலாளர் கைது
சென்னை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மகாராஷ்டிரா வங்கியின் கிளை மேலாளர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் சாய் சுபோதயா அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் தனியார் வங்கி, வணிக வளாகங்கள் உள்ளன. காவலாளியாக திரிகோசர் என்பவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தற்போதுள்ள காவலாளியை நிறுத்திவிட்டு வேறு காவலாளியை நியமிக்க, இங்குள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதற்காக நீலாங்கரையில் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வரும் அப்துல் ரகீம் 43 என்பவரை அழைத்து குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் வாசுதேவன், நிர்வாகிகள் பிராரிலால், சையது ஆகியோர் நேற்று மாலை குடியிருப்பு வளாகத்தில் பேசி கொண்டிருந்தனர். இவர்களது அருகில் காவலாளி திரிகோசரும் நின்றிருந்தார்.
கீழ் தளத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியின் மேலாளர் வெங்கடேஷ்,45 என்பவர், இந்த குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தனது காரை எடுத்து கொண்டு வெளியே செல்ல குடியிருப்பின் பார்க்கிங் பகுதிக்கு வந்தார். பின்னர் காரை இயக்கி கொண்டு வெளியே செல்ல வந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக பிரேக்கில் கால் வைப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்து விட்டாராம். இதில் தறிகெட்டு ஓடிய கார் வெளியில் நின்று பேசி கொண்டிருந்த வாசுதேவன், பிராரிலால், சையது, அப்துல் ரகீம், திரிகோசர் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அனைவரும் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். இதை பார்த்தும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
தகவல் அறிந்து திருவான்மியூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர்களில் பிராரிலால், அப்துல் ரகீம் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் இன்று அதிகாலையில் பரிதாபமாக இறந்தனர். போலீசார் வழக்கு பதிந்து விபத்தை ஏற்படுத்திய வங்கி மேலாளர் வெங்கடேஷை கைது செய்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் மோதிய வேகத்தில் அனைவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த காட்சி அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.