தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதி பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தள்ளுபடி!
தூத்துக்குடி: திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளுக்கான பாமக வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் மாற்று வேட்பாளர் மனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய வேட்பு மனுதாக்கல் சுமார் ஒரு வாரம் நடைபெற்று நேற்று மதியத்தோடு முடிவடைந்தது.

இதில் சுமார் 6,700க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுப் பார்வையாளர்கள் 122 பேர் முன்னிலையில், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படுகிறது. நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள் குறித்த தகவல்கள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பென்னாகரத்தில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வேட்புமனு ஏற்கப்பட்டது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாமக வேட்பாளர் உத்தர்சிங் வேட்புமனு ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தூத்துக்குடி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட களம் நிறுத்தப்பட்ட சேசையா பர்னாந்து வேட்புமனுவும் தள்ளுபடியாகியுள்ளது. திமுக பலம்பெற்று விளங்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பாமக வேட்பாளர்கள் இருவரின் மனுக்கள் தள்ளுபடியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், பாமக சார்பில் திருச்செந்தூரில் மாற்று வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள, குமரன் ஆதித்தன் மற்றும் தூத்துக்குடி தொகுதியில், மாற்று வேட்பாளராக களமிறக்கப்பட்ட சின்னதுரை வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
இதேபோல, செங்கம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த, மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் வேட்பாளர் உஜாகர் சிங் ஜர் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தள்ளுபடிக்கான காரணங்கள் பிறகு தெரியவரும்.












Click it and Unblock the Notifications