அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொடூரமாகக் கொலை.. பெரும் பதட்டத்தில் திண்டுக்கல்!
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் நேற்று பகலில் ஒரு ரவுடி கொடூரமாக வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யப்பட்டார். அதில் ஈடுபட்ட இருவரில் ஒருவரான பிரபல ரவுடி ஜான் பீட்டர் இன்று காலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவரை அடித்தே கொன்றுள்ளனர்.
அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டதால் திண்டுக்கலில் பதட்டம் நிலவுகிறது.
திண்டுக்கல் முருகபவனம் சின்னமுத்து நகரை சேர்ந்த ஆரோக்கியம் மகன் ஜான் பீட்டர். இவர் போலீஸ் ரவுடிகள் பட்டியலில் இருந்து வந்தவர். 25 வயதாகும் இவர் லோடுமேனாக வேலையும் பார்த்து வந்தார். திருமணமாகவில்லை.
இன்று அதிகாலை மீனாட்சிநாயக்கன் பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளி வாசற்படியில் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்தபோது குடிபோதையில் இருந்ததும், அவர் கையில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்ததையும் பார்த்தனர்.
உடனே இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜான்பீட்டரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். ஜான்பீட்டரின் வலது கை சிதைந்த நிலையில் துணி சுற்றப்பட்டு இருந்தது. எனவே மணிக்கட்டு நரம்பை அறுத்து யாரேனும் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
ஜான் பீட்டர் கொலை, பழிக்குப் பழிக் கொலையாக கருதப்படுகிறது. நேற்று பிற்பகலில் ராம்கி என்ற ராம்குமார் என்ற ரவுடியை கடை வீதியில் வைத்து ஜான் பீட்டரும், ராஜா என்பவரும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்தனர். கழுத்தை அறுத்தும் போட்டு விட்டுச் சென்றனர். இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில்தான் ஜான் பீட்டர் கொல்லப்பட்டுள்ளார்.
ராம்குமாரும், ஜான் பீட்டரும் ரவுடிகள். பல வழக்குகள் இருவர் மீதும் உள்ளன. அடிதடி, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து என இவர்கள் மீது இல்லாத வழக்குகளே இல்லை.
நண்பர் செல்வக்குமார் என்பவருக்காக சில நாட்களுக்கு முன்பு ஜான்பீட்டர் மற்றும் ராஜாவை, ராம்குமார் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் சமயம் பார்த்து ராம்குமாரை போட்டுத் தள்ளி விட்டனர் ஜான் பீட்டரும், ராஜாவும். அடுத்தடுத்து இரு ரவுடிகள் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.