திருவனந்தபுரம் கோவில் போல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 2 பாதாள அறைகள் கண்டுபிடிப்பு
திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டு பாதாள அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பூலோக வைகுண்டம் எனப் போற்றப் படுகிறது. இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக கோயில் வளாகத்திலுள்ள அனைத்து உப சன்னிதிகளையும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடந்து வருகின்றது. அதன்படி, இன்று ரங்கவிலாச மண்டபத்தில்மேற்குப் பகுதியில் உள்ள வேணுகோபால சன்னதியை சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இது கி.பி. 8ம் நூற்றாண்டில் ஹொய்சாள மன்னர்களால் கலைநயத்துடன் கட்டப்பட்ட சன்னதி ஆகும்.
எனவே, அந்த சன்னதியைச் சுற்றி இருந்த மண்ணை 6 அடி அளவுக்கு தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சன்னதியின் பின்புறத்தில் மண் சுவரும், மண்ணில் புதைந்திருந்த சிற்பங்களும் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இங்கு ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை ஆணையர் நரசிம்மன், மைய மண்டபத்தின் வலதுபுறம் வண்ணங்களால் வரையப்பட்டிருந்த தன்வந்தரி பெருமாள் ஓவியத்தை கண்டார். இதையடுத்து பழமைவாய்ந்த அந்த ஓவியம் இருந்த மண் சுவரை துளையிட்டு ஆய்வு செய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், நேற்று மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணியின் போது 4 அடி உயரத்தில் இருந்த மண் சுவரை இடித்து அகற்றிய போது உள்ளே 20 அடி நீளம் 5 அடி அகலத்தில் கருங்கல்லான பாதாள அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த அறையிம் தரைப் பகுதியில் சுமார் 2க்கு 2 அடி அளவுள்ள துவாரம் இருந்தது. அதன் வழியாக பார்த்த போது, அந்த அறைக்கு கீழே மற்றொரு பாதாள அறை இருந்தது தெரிய வந்தது. இரு அறைகளும் ஒரே அளவில் அமைக்கப் பட்டிருந்தது.
ஏணி மூலம் அந்த துவாரத்தின் வழியாக ஊழியர்கள் மற்றொரு அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள கற்சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் செதுக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட இரண்டு அறைகளையும் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, இவற்றைப் போலவே கோயிலின் வேறு அறைகள் ஏதேனும் உள்ளனவா என்ற ஆராய்ச்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது சன்னதியின் மற்றொரு ஓரத்திலும் தோண்டும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் பத்மநாபா கோவிலில் பாதாள அறைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் பெருமளவில் பொக்கிஷங்கள் இருந்தது தெரிய வந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது நினைவிருக்கலாம்.