வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் ஊழியரிடம் செயினை அறுத்த திருடர்கள்!
சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் ரயில்வே பெண் ஊழியரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையத்தில் பணி புரிந்து வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். 1 ஆவது நடைமேடையில் நள்ளிரவு 12.45 மணி அளவில் ரயில் நிலைய அதிகாரியின் அறையை நோக்கி இவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சிந்தாமணியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். ஆயிரம் விளக்கு பகுதிக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து எந்த ரயிலில் செல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த சிந்தாமணி கடைசி ரயிலும் சென்று விட்டதே என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதை தொடர்ந்து அவரது பின்னால் சென்ற இளைஞர்கள் 2 பேரும் சிந்தாமணியை பிடித்து திடீரென கீழே தள்ளினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுபற்றி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பிய ஓடிய கொள்ளையர்கள் யார் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ரயில் நிலையங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேகரித்து வைத்துள்ள போலீசார் அதனை வைத்து துப்பு துலக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications