செத்த பிறகும் 2 மனைவிகளிடம் சிக்கி தவிக்கும் தட்சிணாமூர்த்தி.. ஸ்ரீபெரும்புதூர் அருகே கலகல சம்பவம்!
இறந்த கணவனின் உடலை அடக்கம் செய்வதில் 2 மனைவிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: ரெண்டு பெண்டாட்டிக்காரர்கள் நிலை எப்பவுமே பரிதாபம்தான்போல! வாழ்ந்து முடிந்து இறந்தே போனாலும் 2 மனைவிகளின் தொல்லை மட்டும் சிலருக்கு விடாது துரத்துகிறது.
இப்படித்தான் ஒரு சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்துள்ளது. சோமங்கலத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு 2 மனைவிகள். ஒருவர் பெயர் தங்கம்மாள், மற்றொருவர் பெயர் கவுரி. கோலப்பாக்கத்தில் கவுரி வசித்து வருகிறார். இவருடன்தான் தட்சிணாமூர்த்தி வாழ்ந்து வந்துள்ளார்.
அடக்கம் செய்வதில் தகராறு
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி தட்சணாமூர்த்தி உயிரிழந்துவிட்டார். தட்சிணாமூர்த்தியின் உடலை கண்டு இரு மனைவிகளும் மாறி மாறி கதறி புரண்டு அழுதனர். கடைசியில் அவரை அடக்கம் செய்வது குறித்த பேச்சு எழுந்தது. இப்போதுதான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. "இந்து முறைப்படித்தான் சோமங்கலத்தில் அடக்கம் செய்ய வேண்டும்" என தங்கம்மாள் கூறினார். "இல்லை... இல்லை... கிறிஸ்தவ முறைப்படி கோலப்பாக்கத்தில் அடக்கம் செய்ய வேண்டும்" என்று கவுரி ஒற்றைக்காலில் நின்றார். இப்படியே நேரமாகி பொழுதும்போனது.
மருத்துவமனையில் உடல்
கிறிஸ்தவ முறைப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று தட்சிணாமூர்த்தி உயிருடன் இருக்கும்போது எழுதிய ஒரு உயிலை கொண்டு வந்து கவுரி தங்கம்மாளிடம் தந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தங்கம்மாள் இந்த விவகாரம் சம்பந்தமாக போலீஸ் ஸ்டேஷனுக்கே போய்விட்டார். போலீசாரும், இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்கினார். போலீசார் பேச்சை ஒருத்தரும் கேட்கவில்லை. இவ்வளவு சமாச்சாரங்களும் பிணத்தை வைத்துக் கொண்டே நடைபெற்றது. தங்கள் பேச்சை இருவரில் ஒருவர்கூட கேட்காததால், தட்சிணாமூர்த்தியின் உடலை போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
இரண்டு நாட்கள் கெடு
இப்போதும் 2 மனைவிகளின் பிரச்சனை முடியவில்லை. தட்சிணாமூர்த்தியின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி தங்கம்மாளும், கவுரியும் ஐகோர்ட்டுக்கே வந்துவிட்டனர். தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதியும், இருவரையும் அழைத்து சமரசம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். இருவரும் கேட்கவில்லை. யாராவது ஒருவர் அனுசரித்து போங்கள் என்று அறிவுறுத்தினார். அதனையும் 2 பேரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் நீதிபதி, இரண்டு நாட்கள் காலக்கெடு விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
சமரசம் ஆவார்களா?
இந்த 2 நாளில் சமரசம் எதுவும் நடக்காவிட்டால், இருவரிடமும் உடல் ஒப்படைக்கப்படாமல், உரிமை கோரப்படாத உடலாக கருதப்படும் என்றும், பின்னர் காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும்தான் உடலை அடக்கம் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளார். மரணத்திற்குப் பிறகும் கூட தட்சிணாமூர்த்தியை ஆளுக்கு ஒரு பக்கமாக பிடித்து உலுக்கும் கெளரியும், தங்கம்மாளும் சமரசமாகப் போவார்களா, மாட்டார்களா.. பொறுத்திருந்து பார்ப்போம்!