நெல்லை அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது
நெல்லை மாவட்டம், பொட்டல்புதூர் பகுதியிலுள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் பள்ளியின் அருகே நின்றபடி ஒரு இளைஞர் கூட்டம் செல்போனில் போட்டோக்களை எடுத்து வந்துள்ளது.
இதை தட்டிக் கேட்டபோது, மாணவிகளை கத்தியை காண்பித்து அந்த இளைஞர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை சொல்லி அழுதுள்ளனர்.
இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், சம்மந்தப்பட்ட வாலிபர்கள் யார் என்று கேட்டு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் பள்ளி வளாகத்திற்குள் ஒழிந்து நின்ற தலையாரி செல்லப்பாவின் மகனான கிருஷ்ணசாமியை சந்தேகத்தின் பேரில் ஊர்க்காரர்கள் சிலர் பிடித்து வந்து மாணவிகள் முன்பு நிறுத்தினர்.
அப்போது அவர் போட்டோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். தனது கூட்டாளிகள் ஆசாத், கணேசன், சுடலை மாரி, தங்க மாரி ஆகிய இளைஞர்களும் படம் எடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசில் மேற்கண்ட ஐந்துபேர் பெயரிலும் புகார் பதிவு செய்யப்பட்டது. போலீசார், கிருஷ்ணசாமி மற்றும் ஆசாத்தை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். அவர் கல்லூரி மாணவராகும். மற்ற நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.