வருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் 20 மணிநேரம் போராடி காட்டுத்தீ அணைப்பு: சதுரகிரி சென்ற பக்தர்கள்
சதுரகிரிமலையில் பற்றி எரிந்த காட்டு தீ அணைக்கப்பட்டது
வருசநாடு: வருசநாடு அருகே பஞ்சந்தாங்கி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயை சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் அணைத்தனர். இதில் 2 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் எரிந்து நாசமானது.
மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே ஆறாவது பீட்டில் உள்ள பெருமாள் மொட்டை மலையின் கீழ்ப் பகுதியில் நேற்று அதிகாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது

காற்றின் வேகத்தால் தீ அருகில் உள்ள பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கும் பரவியது. தகவலறிந்த வருசநாடு வனத்துறையினர் 20 பேர், பஞ்சந்தாங்கி மலைப்பகுதிக்கு சென்று காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 20 மணிநேர போராட்டத்திற்கு பின்பு காட்டுத் தீயை நேற்று காலையில் வனத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். அதுமட்டும் அல்லாமல் திடீர் மழை பெய்ததால், மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தில் சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவிலான மரங்கள் எரிந்து நாசமானது.
இதனிடையே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதத்திற்கு 4 நாட்கள் அதாவது கடந்த வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் காட்டுதீ பரவிய காரணத்தினால், மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கெனவே மலையில் ஏறிய பக்தர்கள் வனப்பகுதியின் வழியே இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பஞ்சந்தாங்கி மலைப்பகுதியில் மரம் கடத்தல், வனவிலங்குகள் வேட்டையாடுதல், மணல் கடத்தல் போன்றவை நடக்கின்றன. இதில் ஈடுபடும் மர்மநபர்கள் ஒரு பகுதியில் தீ வைத்து வனத்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு, மற்றொரு பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இத்தகைய சமூகவிரோதிகளை கண்டறிந்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications