20 ஸ்லீப்பர் செல்கள் ரெடி.. விரைவில் வெளியே வருவாங்க.. என்ன சொல்கிறார் தினகரன்?
எடப்பாடி அணியில் இருந்து வெளியேற 20 ஸ்லீப்பர் செல்கள் தயாராகவுள்ளனர் என்று அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
Recommended Video
தூத்துக்குடி: எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க அந்த அணியிலிருந்து 20 ஸ்லீப்பர் செல்கள் வெளியேற தயாராக உள்ளனர் என்று தினகரன் மீண்டும் ஒரு குண்டை போட்டுள்ளார்.
போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் நேற்றிரவு ரெய்டு நடத்தினர். இந்நிலையல் திருசெந்தூர் முருகனை தரிசிக்க சென்ற தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்று நான் மட்டும் அல்ல. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கூறி இருக்கிறார்கள். இந்த சோதனைக்கு நான் பயப்படவில்லை. தொண்டர்களுக்கும், கழகத்தை வழிநடத்தும் நிர்வாகிகளுக்கும் என்னைப்பற்றி நன்கு தெரியும்.
முதல்வருக்கும் அமைச்சருக்கும்தான் அதிகாரம்
புதுச்சேரி, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களில் உள்ள கவர்னர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளன. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசாங்கத்தை சேர்ந்த முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும்தான் அதிகாரம் உள்ளது.
20 எம்எல்ஏக்கள் உள்ளனர்
கருணாஸ், தனியரசு, அன்சாரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உள்ளனர். மரியாதை நிமித்தம் என்பது வேறு, அவர்களோடு கைகோர்ப்பது வேறு, ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் இன்னும் 20 பேர் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.
சதியை முறியடிப்போம்
இந்த தகவல் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் காதுகளை எட்டியதால்தான் வருமான வரித் துறையை ஏவியுள்ளனர். இதுபோன்ற சோதனை நடத்தினால் எம்.எல்.ஏ.க்கள் பயந்து அமைதியாக இருந்து விடுவோம் என்ற அரசியல் சதிதான் இது. இந்த சதியை எல்லாம் முறியடித்து, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி அமையும்.
ரேஷன் கடையே இருக்காது
ஸ்லீப்பர் செல்கள் வெளியில் வர வேண்டிய நேரத்தில் வருவார்கள். ரேசன் கடைகளில் உளுந்து நிறுத்தப்பட்டு உள்ளது. சர்க்கரையின் விலை அதிகரித்துள்ளது. இன்னும் சில காலங்களில் ரேஷன் கடையே இருக்காது என்றார் தினகரன்.