காதலியைக் கொன்று தலைமறைவாக உள்ள தினேஷ்... 20,000 போஸ்டர் ஒட்டி தமிழகம் முழுவதும் தேடல்!
சென்னை: சென்னையில் காதலியைக் கொன்று விட்டு தலைமறைவாக உள்ள தினேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குற்றவாளி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி, தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வரலாறு காணாத தேடுதல் வேட்டையாக இது தற்போது மாறியுள்ளது.
சென்னை தலைமைச் செயலக காலனி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ். வங்கி ஊழியரான தினேஷும், சூளை தட்டண்ணா தெருவைச் சேர்ந்த அருணாவும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தினேஷின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இதனால், தாயாரும் மருத்துவமனை சென்று விடவே வீட்டில் இருந்த தனிமையைப் பயன்படுத்தி, காதலியை அழைத்து வந்துள்ளார் தினேஷ்.
ஆனால், திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் அருணாவைக் கொலை செய்தார் தினேஷ். சடலத்தைக் காரில் கடத்த முற்பட்ட போது அக்கம்பக்கத்தாரிடம் சிக்கினார் தினேஷ். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய தினேஷ், மருத்துவமனைக்குச் சென்று தனது தாயாரைச் சந்தித்து விட்டு தலைமறைவானார்.
இது குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் தினேஷை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கிட்டத்தட்ட சம்பவம் நடந்து 3 மாதங்களாகும் நிலையில், தினேஷின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். எனவே, தினேஷ் குறித்த தகவல் அறிந்தவர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கும் படி 20 ஆயிரம் போஸ்டர்களை தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டரில் தினேஷ் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் ராமசாமியை 97909 58282 என்ற செல்போன் எண்ணிலும், 044 23452704 என்ற காவல் நிலைய எண்ணிலும், 044 23452359 என்ற சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப் அப்ட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் தினேஷின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 20 ஆயிரம் போஸ்டர்களை தமிழகத்தில் ஒட்டியிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.