சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 2016ல் 60 நாட்கள் விடுமுறை: தலைமைப் பதிவாளர்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு 2016ம் ஆண்டில் 60 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மே 1 முதல் 31ம் தேதி வரை கோடை கால விடுமுறையும், அக்டோபர் 8 முதல் 16ம் தேதி வரை தசரா விடுமுறையும் ஆகும். டிசம்பர் 24 முதல் 31ம் தேதி வரை கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்படுகிறது.
இதுதவிர புத்தாண்டுக்காக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதியும், பொங்கல் பண்டிகைக்காக 13ம்தேதி முதல் 15ம் தேதி வரையிலும், குடியரசு தினத்துக்காக 26ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.
அதேபோல புனித வெள்ளியை முன்னிட்டு, மார்ச் 25ம் தேதியும், தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 8-ந் தேதியும், தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 14ம்தேதியும், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 19ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7 மற்றும் 8ம் தேதியும், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15ம் தேதியும், கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 25ம் தேதியும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.
ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் ஆகியவைகளுக்காக அக்டோபர் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், தீபாவளி பண்டிகையை (அக்டோபர் 29ம் தேதி) முன்னிட்டு அக்டோபர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும், மிலாது நபியை முன்னிட்டு டிசம்பர் 12ம் தேதியும் உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது.
அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாள்கள்தான். இந்த நாள்களில் வரும், உழவர் திருநாள், தீபாவளி போன்ற அரசு விடுமுறைகள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.