புதுச்சேரியில் ஏ.டி.எம் மெஷினை உடைத்து 24 லட்சம் ரூபாய் கொள்ளை!
புதுவை: புதுச்சேரியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூபாய் 24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
புதுவை-கடலூர் சாலையில் தவளக்குப்பத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
ஏ.டி.எம்மில் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி காவலாளியாக உள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல் துரைசாமி பணியில் இருந்தார்.

அதிகாலை 3.30 மணியளவில் துரைசாமி கண் அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது யாரோ மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம்.க்குள் நுழைந்தனர். பின்னர் கள்ள சாவியை போட்டு ஏ.டி.எம் எந்திரத்தை திறந்துள்ளனர். அதில் இருந்த ரூபாய் 24 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அதிகாலை 4.30 மணிக்கு துரைசாமி எழுந்துள்ளார். அப்போது ஏ.டி.எம் திறந்து கிடந்ததைக்கண்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
காவலாளி துரைசாமியிடம் போலீசார் விசாரித்தனர். நான் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் கொள்ளை நடந்து விட்டது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் போலீசாருக்கு அவர் மீதே சந்தேகம் உள்ளது. எனவே அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏ.டி.எம்.மை கள்ள சாவி போட்டு திறந்தாலும் ரகசிய எண்ணை பயன்படுத்தினால் தான் அதை முற்றிலும் திறக்க முடியும். எனவே வங்கிக்கு சம்மந்தப்பட்டவர்கள் ரகசிய எண்ணை தெரிந்தவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே அந்த கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications