எம்.எல்.ஏ சீட்... காமாட்சியம்மன் பெயர்... கலப்பு மணத்திற்கு தடை... கலக்கிய தெலுங்கு செட்டியார்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிகளுக்கும் ஜாதிக்கட்சிகளுக்கும் பஞ்சமில்லை. இப்போது புதிதாக கிளம்பியுள்ளது ஒரு ஜாதிச்சங்கம். சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி நம் இனத்துக்கு சீட் ஒதுக்குகிறதோ, அக்கட்சிக்கே ஆதரவளிப்போம் என்று கூறியுள்ளனர் 24 மனை தெலுங்கு செட்டியார்கள். கலப்புமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தங்கள் சாதியை எம்.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும். தங்கள் சாதியினரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்த தோடு, "நம் குலதெய்வமான காமாட்சியம்மன் பெயரை குழந்தைகளுக்கு வைக்க வேண்டும்' என்று தங்கள் சாதியினருக்கும் உத்தரவிட்டுள்ளனர்.
24 மனை தெலுங்குச் செட்டியார்களின் தலைமைச் சங்க 10-ஆவது மாநில மாநாடு டிசம்பர் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் திண்டுக்கல்லில் அங்குவிலாஸ் திடலில் நடைபெற்ற இம்மாநாட்டில் சங்கத்தின் நல்லெண்ணக் குழுத் தலைவர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. தி.மு.க. கே.சி. பழனிச்சாமி, சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பாலகிருஷ்ணா, தலைமைச் சங்கத் தலைவர் நடராஜன் ஆகியோர் ஆர்வத்தோடு பங்கேற்றனர். கோவை, திருப்பூர், கரூர், பொள்ளாச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, மதுரையிலிருந்து பலரும் குடும்பத்தினரோடு வந்திருந்தனர்.
டிசம்பர் 25, 26, 27 ஆகிய நாட்களில் 24 மனை தெலுங்குச் செட்டியார்கள் ஒருங்கிணைப்பு சங்கத்தின் மாநில மாநாடு மதுரை பாண்டி கோயில் அருகில் நடத்தினார் ஜெகநாத் மிஸ்ரா. செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் சங்கத்தின் சார்பில் அமைக்கப்படும் என்றார்.
தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளுக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும். தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் மற்றும் வியாபாரிகளுக்காக நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். தலைச்சுமை வியாபாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் அரசு தனி வாரியம் அமைத்திட வேண்டும். தமிழகத்தின் வெள்ளச் சேதப் பாதிப்புகள் அதிகளவில் இருப்பதால் மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

மதுரையில் மாநாடு
24 மனை தெலுங்கு செட்டியார் மாநில ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் மாநில மாநாடு மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் ஆன்மிக நிகழ்ச்சிகள், சமுதாய விழிப்புணர்வு என்ற தலைப்பில் கருத்தரங்கம், விவாத மேடை, செயற்குழு கூட்டம், பொதுக்குழு கலந்தாய்வு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
மாநாட்டின் நிறைவு நாளன்று விழா மலரை மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜெகநாத் மிஸ்ரா வெளியிட மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோகன் பெற்று கொண்டார். ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

முக்கிய தீர்மானங்கள்
மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. எங்கள் சமுதாயத்திற்கும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் கூறுகின்றன. அவற்றை ஆராய்ந்து பாதுகாத்திட வேண்டும். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி அதனை மீண்டும் எழுச்சியுடன் நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிற்சி வகுப்புகள்
விளையாட்டு துறையில் மாவட்ட, மாநில அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பல விருதுகளை பெறும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அகடாமி அமைத்து நல்ல உறைவிடத்துடன் கூடிய பயிற்சி வகுப்புகள் அமைக்கப்பட வேண்டும்

கலப்பு மணம் கூடாது
நம் இனத்தவர்கள் பிற சாதிகளோடு கலப்புமணம் புரியக்கூடாது. ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடை நீக்கப்பட வேண்டும்'' என்று பல தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் வாழ்த்து
இந்த மாநாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாடு வெற்றிபெற முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார் அதனை மேடையில் வாசித்தார் ஜெகநாத் மிஸ்ரா.












Click it and Unblock the Notifications