ஸ்டாலினின் 2ம் கட்ட நமக்கு நாமே பயணம்... 7ம் தேதி நீலகிரியில் தொடக்கம்
சென்னை: நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் 2வது கட்ட பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி நீலகிரியில் தொடங்குகிறார். கோவை, திருப்பூர். ஈரோடு, நாமக்கல், என தொடரும் பயணம் 18ம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது.
இது குறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், ‘நமக்கு நாமே' விடியல் மீட்பு பயணத்தை முதல் கட்டமாக குமரியில் செப்டம்பர் 20ம் தேதி அன்று தொடங்கி 12 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்டோபர் 2ம் தேதி திருச்சியில் இந்த பயணத்தை நிறைவு செய்தார்.
வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், வெளிப்படையான நிர்வாகம் என்ற உன்னதமான மாற்றத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டாம் கட்டமாக 7ம்தேதி அன்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறார். தமிழகத்திற்கு ஆக்கப்பூர்வமான வித்தியாசமான மாற்றத்தை கொடுக்கவேண்டும் என்ற எண்ணவோட்டத்தின் அடிப்படையில் அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாகத் திகழவும், ஜனநாயகம் என்ற அணையா தீபம் மாநிலத்தில் சுடர்விட்டு ஒளிபரப்பவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் பாடுபட்டு வரும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இந்தப் பயணத்தின்போது மக்களை சந்திப்பார். பல்வேறு தரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் நடத்துவார். இளைஞர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்பார்.
நமக்கு நாமே விடியல் மீட்புப்பயணத்தின் இரண்டாம் கட்டம் நீலகிரி மாவட்டத்தில் 7ம்தேதி தொடங்கி, 18ம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது.
அந்த அடிப்படையில் 7ம் தேதி நீலகிரி, 8ம் தேதி கோவை புறநகர், 9ம் தேதி கோவை மாநகர், 10ம் தேதி ஈரோடு, 11ம் தேதி திருப்பூர், 12ம் தேதி கரூர், 13ம் தேதி நாமக்கல், 14ம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர், 15ம் தேதி தஞ்சாவூர், 16ம் தேதி திருவாரூர், 17ம் தேதி நாகப்பட்டினம், 18ம் தேதி கடலூர்.
முதற்கட்ட பயணத்தை தென் மாவட்டங்களில் தொடங்கிய ஸ்டாலின் இரண்டாம் கட்ட பயணத்தை மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்கிறார். நமக்கு நாமே விடியல் மீட்புப் பயணத்தின் மூன்றாவது கட்டப் பயணம் நவம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.