தொடரும் ஆர்.கே.நகர் அதிரடி.. 3 "ஏசி"க்கள் இடமாற்றம்.. வெயிட்டிங் லிஸ்ட்டில் வைப்பு!
ஆர்.கே.நகரில் 3 போலீஸ் உதவி ஆணையர்கள் இடமாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் காவல்துறை உதவி ஆணையர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியான பத்மஜா தேவி, காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மாற்றப்பட்டனர்.
பத்மஜா தேவிக்குப் பதிலாக பிரவீண் நாயரும், ஜார்ஜுக்கு பதிலாக கரண் சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா புகாரை அடுத்து 115 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.கே. நகருக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்த்குமார், ராயபுரம் ஸ்டீபன், திருவொற்றியூர் குமார் ஆகிய மூவரை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி அவர்களை மூவரையும் இடமாற்றம் செய்து மூவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைக்க காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு பதில் புதிய ஆணையர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.